Posted by : Unknown Monday, May 27, 2013

சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம் - இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்.
நிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரியஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் சூரியஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமான விஷயம். ''மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தரத் தீர்வாக சோலார் பவர் நிச்சயமாக இருக்கும்''. 
சோலார் பவர் மூலம் நமது அன்றாட மின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டா? 
''சோலார் பவர் மூலம் தொழிற்சாலைகளுக்கான மின் தேவைகளை மட்டுமல்ல, வீடுகளுக்கான மின் தேவை களையும் தீர்க்க முடியும். இதற்கான ஆரம்பச் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் வரை வரும். சில சின்னச் சின்ன பராமரிப்புச் செலவுகள் தவிர வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும்போதே இதற்கான செலவையும் செய்துவிட்டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.  நாளன்றுக்கு மூன்று முதல் நான்கு யூனிட்கள் வரை மின்சாரத்தைச் செலவழிக்கிற வீடுகளுக்கு ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். அதைவிட அதிகமாகப் பயன்படுத்தும் வீடுகளில் இரண்டு கிலோவாட் அல்லது அதற்கு மேலும் யூனிட்களை அமைத்துக் கொள்ளலாம். ஐந்து கிலோவாட் வரை யூனிட் அமைத்துக் கொண்டால், மோட்டார்கள், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும்.சூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும்போது அதற்கான செலவு கணிசமாக குறைய வாய்ப்புண்டு.
 
இதில் முக்கியமான விஷயம், சூரியஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மானியம் அளிக்கிறது. வீடுகள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு கிலோவாட் யூனிட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 கிலோவாட் வரை அனுமதிக்கப்படுகிறது. மழைக் காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாதபோது எப்படி மின்சாரம் தயாரிப்பது என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெயில் அடித்தால் தான் சோலார் கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது தவறு. மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது மழைத் தண்ணீர் விழுந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.500 வாட்ஸ் மூலம் இரண்டரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு 50,000 ரூபாய் செலவாகும்.மின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திருக்காமல் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள பெஸ்ட் வழி, சோலார் பவர்தான்!
-பானுமதி அருணாசலம், நீரை. மகேந்திரன்
அசத்தும் குஜராத்!
ஆசியாவிலே மிக அதிகமான மின்சாரத்தை சூரியஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை அமைத்துள்ளது குஜராத். 3,000 ஏக்கர் பரப்பளவில் ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் 200 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை கொண்ட சோலார் பார்க்-தான் உள்ளது.
செலவு மற்றும் பராமரிப்பு!
* ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க குறைந்தபட்சமாக 1 லட்சம் முதல் அதிகபட்சமாக சுமார் 3.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஐந்து கிலோவாட் யூனிட் அமைக்க அதிகபட்சமாக 12.5 லட்சத்துக்குள் முடித்துவிடலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.  
* ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பேட்டரி மாற்ற வேண்டும். பேனல்களை துடைத்து சுத்தப்படுத்துவது, பேட்டரிக்குரிய டிஸ்டில்டு வாட்டர் மாற்றுவது தவிர வேறு செலவு இல்லை.


மின் சாதனங்களின் மின் பயன்பாடு!
டியூப் லைட்: 20 - 40 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 75 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 100 வாட்ஸ், டி.வி: 130 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 210 வாட்ஸ், டி.வி.டி: 20 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 120 வாட்ஸ், மானிட்டர்: 150 வாட்ஸ், லேப்டாப்: 50 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 4 வாட்ஸ், மியூசிக் சிஸ்டம்: 60 வாட்ஸ். சாதாரணமாக வீடுகளில் கரன்ட் மூலம் பயன்படுத்தப்படும் மின் பொருட்கள் எடுத்துக் கொள்ளும் மின் அளவு இது. இதில் நீங்கள் பயன்படுத்துவது எத்தனை வாட்ஸ் என கணக்கிட்டு அதற்கு தகுந்த சோலார் பேனல்களை அமைத்துக் கொள்ளலாம்.

 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Google Search

Select Ur Language Here

Popular Post

Page Views

Ads

RSS Feed

Dr.Tech Solution. Powered by Blogger.

- Copyright © Dr.Tech Solution - Robotic Notes - Powered by Blogger - Designed by Johanes Djogan -